பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி கடந்த மாதம் ஆய்வுக்கு சென்ற போது தனது மகனை அங்கன்வாடியில் சேர்ப்பதாக தெரிவித்திருந்த நிலையில் நேற்று தனது மகனை அங்கன்வாடியில் சேர்த்துள்ளார்.பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக ஷரண்யா அரி பொறுப்பேற்றவுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த மாதம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்ட போது அப்போதே தானும் தனது மகனை அரசு அங்கன்வாடியில் தான் சேர்ப்பேன் என அங்கு வந்திருந்த பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதனிடையே தான் கூறியது போல மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி பெரம்பலூர் விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் தனது இரண்டு வயது மகன் ஆத்விக்கை சேர்த்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, அவர் கூறுகையில், "விளையாட்டுடன் கூடிய ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்தான உணவு, பாதுகாப்பான சூழல் என அனைத்து வசதிகளும் நிறைந்த அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய சேவைகளை குழந்தைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் அனைவரும் குழந்தைகளை அரசு அங்கன்வாடி மையங்களில் சேர்க்க பெருமளவில் முன்வர வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
Comments