திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் உலா வந்த கரடியை வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்தனர்.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதியை ஒட்டி அனவன் குடியிருப்பு, சங்கர பாண்டிபுரம், திருப்பதியாபுரம், பசுக்கடை விளை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஊருக்குள் கரடி ஒன்று நடமாடி வந்தது. அந்த பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய நிலையில் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் கரடி நடமாட்டம் அதிகம் கண்டறியப்பட்ட பகுதியான அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் ஆம்பூர் பீட் வெளிமண்டல பகுதியான சங்கரபாண்டிய புரத்தில் கரடியை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. மேலும் கூண்டு வைத்த அந்த பகுதியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த சுமார் 8 வயது உடைய கரடி ஒன்று கூண்டில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரடியை பாதுகாப்பாக கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் வனத்துறை கால்நடை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு கரடிக்கு முழு உடல் பரிசோதனை செய்த பின்பு அந்த கரடியை முண்டந்துறை வனச்சரகம் கொடமாடி பீட்டிற்கு கொண்டுசென்று அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். ஏற்கனவே இந்த பகுதியில் கடந்த 5ஆம் தேதி கரடி ஒன்று கூண்டில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Comments